Friday, September 27

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!


வீடு திரும்பலின் வழி மறந்து
தொலைந்தே கிடக்கிறேன் -என்
வானில் தடயமும் இல்லை..


இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!


~~~


ஏனோ..
என் பறக்கும் அழகை
சுதந்திரம் என்றெண்ணும் -எவருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை
 
என் சிறகின் வலி!

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!


~~~

எனைவிரட்டும் 
இராட்சத பறவையோ -இல்லையோர்
நாண் வளைத்த வேடுவனோ
என் கனவில் வருவதை - நான்
எவர் கனவில் சென்றுரைப்பேன்..?

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!

~~~

நிறைந்திருக்கும் 
சூன்ய வெளி இங்கே -அடடா
எங்குமே சூன்யமில்லை..
இதற்கு முன்பே -கூடு 
மறந்த பறவைகளின் 
பெரும் பீதி,
எச்சம் இட்டு திரிந்தோர் 
வாழ்வின் எச்சம் 
இங்கும் அங்குமாய்..
இதன் ஊடே நானும்.. 

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!

~~~

காற்றின் திசையில் 
எல்லா இடமும் திரியும் 
எனக்கு..
எப்போதும் ஒரே ஆசை தான்!
எப்போது நான் மனிதனாவேன்?..

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!

Post Comment

No comments: