சாரா பேச ஆரம்பித்தால் அவளுக்கே மூச்சு முட்டி குரல் அடைத்தாலும் சொல்லவந்ததை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் பேச்சை முடிப்பாள். மைக்ரோ செக்கன்களில் அவளுக்கு குப்பென கோபம் முளைக்கும். கோபம் உள்ள இடத்தில்தானே குணமிருக்கும் என்கிற சொல்லின் ஆதர்சநாயகி-யவள். ரசனிக்கும் மனம் (ரசனையை ரசிக்கும் மனம் எனக்கொள்க) கொண்டவள். அந்த மனம் தான் அவளை லிசாவின் ரசிகை ஆக்கியது.
இந்தக் கதையின் பிரகாரம் அவன்தான் நாயகன். லிசா என்பது அவனது நிஜப்பெயரல்ல புனைப்பெயர். இந்த பெயருக்கான விளக்கம் சாராவுக்கு இன்னமும் தெரியாது. அவள் அறிமுகம் கிடைத்த நாளில் இருந்துதான் புனைப்பெயர் வைத்துக்கொண்டான். அவனுக்கு கவிதை எழுதப்பிடிக்கும். அதை வாசித்து அவள் சிலிர்க்கும் தருணங்களில் பரவசமாய் ஏதோ ஒன்று மனதின் மையத்தில் வந்துபோகும் அந்தநொடி, அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். கவிதையின் பின் லிசா என்று கையொப்பமிடுவான். அதற்கு அவன் வைத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்.. (வேண்டாமே!! சஸ்பென்ஸ் போயிடும். கடைசியில கண்டிப்பா சொல்லிடுவேன். நீங்க கதையை படிங்க.)
பழகிய சில நாட்களிலேயே காதல் மலர்ந்து அதை இருவருமே மறைக்க முயன்று தோற்றுப்போனதில், ஒரு வாட்ஸ்எப் ஃபோர்வர்ட் மெசேஜ் காதலை பகீரென்று போட்டுடைத்தது. அதன் பின்னர் அவர்களின் அன்றாட சாட்டிங்கில் காதல் கலகலக்கும். அப்படியானதொரு நாளில்..
"சாரு.. கோயிங் டு கோவில் வித் அம்மா"
-சிறுபீப்போலி கேட்டு வாட்ஸ்எப் திறந்தாள் சாரா.
ஆச்சர்ய-முகமிட்டு கேள்விக்குறியோடு மறுமொழிந்தாள். பதிலுக்கு மென்சிரிப்பில் ஒரு முகம் இமோஜி ஆனது.
"போயிட்டு வந்து சொல்லுறேன்"
அதற்கடுத்த வரியில் அவன் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.
அதை முடிப்பதற்குள் அவனுக்கு செல்லிடப்பேச முனைந்தாள். கட் செய்தான். மீண்டும் முயன்று கட் செய்கிறான் என்று தெரிந்தும் மீண்டும் முனைந்தாள்!
"வெயிட்2"
-பளிச்சிட்டது அவனிடமிருந்து மெசேஜ். கடுப்போடு காத்திருந்தாள்.