வீடு திரும்பலின் வழி மறந்து
தொலைந்தே கிடக்கிறேன் -என்
வானில் தடயமும் இல்லை..
இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!
~~~
ஏனோ..
என் பறக்கும் அழகை
சுதந்திரம் என்றெண்ணும் -எவருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை
என் சிறகின் வலி!
இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!
~~~
எனைவிரட்டும்
இராட்சத பறவையோ -இல்லையோர்
நாண் வளைத்த வேடுவனோ
என் கனவில் வருவதை - நான்
எவர் கனவில் சென்றுரைப்பேன்..?
இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!
~~~
நிறைந்திருக்கும்
சூன்ய வெளி இங்கே -அடடா
எங்குமே சூன்யமில்லை..
இதற்கு முன்பே -கூடு
மறந்த பறவைகளின்
பெரும் பீதி,
எச்சம் இட்டு திரிந்தோர்
வாழ்வின் எச்சம்
இங்கும் அங்குமாய்..
இதன் ஊடே நானும்..
இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!
~~~
காற்றின் திசையில்
எல்லா இடமும் திரியும்
எனக்கு..
எப்போதும் ஒரே ஆசை தான்!
எப்போது நான் மனிதனாவேன்?..
இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!
|
Tweet |
No comments:
Post a Comment